தீரன் பெரிய பாண்டியின் உடல் இன்று சென்னை வருகை !! சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு !!!
கொள்ளையர்களை பிடிக்கச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கொளத்தூர் காவல் துறை ஆய்வாளர் பெரிய பாண்டியின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. சென்னையில் அவரது உடல் சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்படவுள்ளன.
சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பான இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ், சௌத்ரி ஆகியோர் பாலி மாவட்டம் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடன் சென்ற போலீஸாரும் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும், இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படை ஒன்று ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றது. சந்தோஷ்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் உடல் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து பெரிய பாண்டியின் உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்படுகிறது.
.சென்னையில் அவரது உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யப்பட்டு பின்னர் விமானம் மூலம் தூத்துக்குடி கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து சாலை வழியாக பெரிய பாண்டியின் உடல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காவல்துறை சார்பில் இறுதி மரியா செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை இழந்து தவிப்பதாக அவரது உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.