குறை கூறுவதை நிறுத்திவிட்டு தேவையான தடுப்பூசிகளை பெற்றுத்தர பாஜகவினர் முன்வர வேண்டும்- அமைச்சர் மா.சு.
தமிழகத்தில் தொற்றின் அளவு பாதிக்கப்பட்டோரை காட்டிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று படிப்படியாக சரிந்து வருகிறது என்றும் விரைவில் தமிழகம் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசின் செயல்பாடுகளை குறை கூறாமல் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை தமிழக பாஜகவினர் மத்திய அரசிடம் பெற்று தர முன் வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ஓட்டேரியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், அத்தியாவசிய பொருட்களை வாகங்னங்கள் மூலம் வீடு தேடி சென்று விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 83லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, அதிமுக ஆட்சியில் தினசரி சராசரியாக 61ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது சராசரியாக 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவரின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது தமிழக அரசிடம் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. மேலும், தமிழகத்தை காட்டிலும் குஜராத் மாநிலத்திற்கு அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. வானதி சீனிவாசன் கோவை புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார், சென்னைக்கு அடுத்து அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது கோவையில்தான் என்றும் அரசின் செயல்பாடுகளை குறை கூறாமல் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை தமிழக பாஜகவினர் மத்திய அரசிடம் பேசி பெற்று தர முன் வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொற்றின் அளவு பாதிக்கப்பட்டோரை காட்டிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று படிப்படியாக சரிந்து வருகிறது என்றும் விரைவில் தமிழகம் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவதில் திமுகவினர் தலையீடு எங்கேயும் இல்லை. தடுப்பூசி செலுத்துவதில் திமுகவினர் தலையீடு இருந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் பெரிய அளவில் பெரிய விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள் என மா.சுப்பிரமணியன் கூறினார்.