கொரோனா விட ஆபத்தான நோயாக பாஜக வளர்ந்து வருகிறது... அதை ஒழிக்கவே திமுகவுடன் கூட்டணி.. கே.எஸ்.அழகிரி..!
தொகுதிகளின் எண்ணிக்கை அரசியல் கள நிலவரத்தை பொறுத்தது, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் கூட போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தொகுதிகளின் எண்ணிக்கை அரசியல் கள நிலவரத்தை பொறுத்தது, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் கூட போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழுபறிக்கு இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி;- திமுகவுடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே தான். மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுகிறோம். சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படத்த வேண்டும் என்பதே இலக்கு. கொரோனா விட ஆபத்தான நோயாக பாஜக கட்சி வளர்ந்து வருகிறது. மற்ற கட்சிகளுக்கு தன்னிடம் உள்ள நோயை பரப்ப பாஜக முயற்சிக்கிறது. இந்நதியாவில் உள்ள பல்வேறு இயக்கங்களிலும் உட்புகுந்து அவற்றை பலவீனப்படுத்தி வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மற்ற கட்சிகளில் இருப்பவர்களை கட்சி மாறவைத்து அரசாங்கத்தை சீர்குலைத்து கவிழ்த்து வருகிறது பாஜக என கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இது தேர்தல் அல்ல, இரண்டு சித்தாந்தங்களுக்கு எதிரான போர். குறைவான தொகுதிகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பு. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் என கே.எஸ்.அழகிரி கூறினார்.