கலவர நாளும் வந்திடுமோ?: மறைந்தது ஆரிய - திராவிட மோதல்! வெடிக்குது திராவிட - தமிழ்தேசிய யுத்தம்.
தமிழகத்தில் ஆயிரத்தெட்டு வகையான பிரச்னைகள் நடந்தாலும் கூட எல்லாவற்றுக்கும் அடிநாதமான மோதல் என்னவென்றால் ‘திராவிடமா அல்லது ஆரியமா’ என்பதாகதான் இருக்கும். சுதந்திரத்துக்குப் பின்னான தமிழக அரசியல் இந்த நிலையில்தான் இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தது.
ஆனால் சமீப காலமாக இந்த சூழலில் மிகப்பெரிய மாற்றம் உருவாகி இருக்கிறது. அது ‘திராவிடமா அல்லது தமிழ் தேசியமா?’ என்கிற நிலைதான். பா.ம.க.விலிருந்து பிரிந்து வந்த வேல்முருகன், திருமுருகன் காந்தி போன்றோர் ‘திராவிடமே பிரதானம்’ என்று குதிக்க, பாரதிராஜா மற்றும் இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் ‘தமிழ்தேசியமே தேவை. திராவிட போர்வையில் சிலரால் நாம் சுரண்டப்பட்ட கொடுமை போதும் போதும்.’ என்கிறார்கள்.
இந்நிலையில்தான் நெடுங்காலமாக தேர்தல் ரீதியில் இல்லாமல் உணர்வு ரீதியிலான அரசியலை முன்னெடுத்து வரும் சீமான் இதுபற்றி என்ன சொல்கிறார்? என்றால்...”ஆரியம், திராவிடம் இரண்டையுமே நான் ‘மாயை’ என சொல்கிறேன். எனவேதான் அந்த இரண்டின் பிரதிநிதிகளும் என்னை எதிர்க்கிறார்கள். இன்று தமிழகத்தின் நிம்மதியை சிதைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களான காவிரி, நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு காரணமே திராவிடம்தான்.
தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்! என்று சொல்வதுதான் தமிழ் தேசியம். இது தவறா?” என்கிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆரியம் - திராவிடம் விவாதங்கள் மறைந்து திராவிடம் - தமிழ்தேசியம் என இரு தரப்புகளுக்கு இடையிலான கருத்து மோதல்களே பிரதானப்பட்டுக் கிடக்கின்றன. இப்படியப்படி இல்லாத வார்த்தைகளில் இரண்டு தரப்புகளுமே முட்டி மோதி மண்டை உடைத்துக் கொள்கின்றன.
இணையத்தில் நடக்கும் இந்த மோதல் பொது வெளியிலும் வந்து வெடிக்கிறது. இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையில் பஞ்சாயத்து பேசி, வழக்கு தீர்த்து வைக்கவும் ஒரு டீம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஓரளவு பொறுமையுடைய ஆரிய - திராவிட மோதலிலேயே இதுவரையில் எத்தனையோ உயிரிழப்புகள் கூட நிகழ்ந்திருக்கின்றன. இந்நிலையில் மிக சென்சிடீவான தன்மையுடைய திராவிட மற்றும் தமிழ்தேசிய தரப்புகளிடையே வெடித்து வரும் இந்த மோதல் மிகப்பெரிய கலவர, களேபரங்களுக்கு காரணமாகிவிட கூடாது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
இந்நிலையில் திராவிடம் மற்றும் தமிழ்தேசியம் இடையிலான இந்த மோதலின் பின்னணியே ஆரியம்தான் என்று சில விமர்சகர்கள் ஸ்டேட்மெண்ட் தட்டியிருப்பதுதான் அதிர்ச்சியே!