திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...! மே 3-ல் ஆஜராக உத்தரவு
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மே 3 ஆம் தேதி ஆஜராகுமாறு திவாகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று தமிழக அரசின் முன்னாள் சிறப்பு செயலாளர் சாந்தா ஷீலா நாயர் உள்பட 4 பேர் ஆஜராகினர். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி கிளை மேலாளர் லீலா செல்வக்குமாரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனிடன் குறுக்கு விசாரணை நடத்த, சசிகலா தரப்பினர் கோரியிருந்தனர். அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மூவரும் ஆஜராகினர். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கேள்விகளுக்கு சாந்தா ஷீலா நாயர், லீலா செல்வக்குமாரி ஆகியோர் விளக்கம் அளித்த நிலையில், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனிடம் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், தாமாக முன்வந்து விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மே 3 ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மறைந்த ஜெயலலிதா குறித்த மருத்துவ விவரங்களை ஆய்வு செய்ய மருத்துவக்குழு ஒன்றை அரசிடம் ஆணையம் கேட்டிருந்தது. இதற்கு மருத்த்துவ குழுவை ஆணையமே அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.