ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளரை ஓவர்டேக் செய்த அமமுக வேட்பாளர்.. ஒரு ஓட்டுக்கூட வாங்காத அதிசயம்.!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடந்த ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தலில் அமமுக வேட்பாளர் ஒரு ஓட்டுக்கூட வாங்காத நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதைப் போலவே, பிற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் கோவை மாவட்டம் பெரியகவுண்டம்பாளையம் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கு பெற்றது இணையத்தில் வைரலானது.
அதைவிட ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10-வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் சண்முகம் ஒரு வாக்குக்கூட வாங்காத நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட சண்முகத்துக்கு அருகே உள்ள வேறொரு வார்டில்தான் வாக்கு இருந்தது. எனவே, அவருடைய வாக்கைக்கூட இந்த இடைத்தேர்தலில் அவருக்குப் பதிவு செய்ய முடியாமல் போனது.
இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து திமுக வென்றது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக ஒரு ஓட்டு வாங்கியதும், அமமுக ஒரு ஓட்டுக்கூட வாங்காமல் போனதும் சமூக ஊடங்களில் பேசுபொருளாகியுள்ளது.