என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்தது அதிமுக அரசு... கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு..!
இந்த அதிமுக அரசு ‘விஸ்வரூபம்’ படத்தின்போது என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளையொட்டி ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ‘காலத்தை வென்றவன்’ என்ற ஆவணப்படத்தை கமல்ஹாசன் வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரின் மீட்சிதான் நான். விதை நான் போட்டது என்பது சிவாஜியின் வசனம் மட்டுமல்ல. அது எம்ஜிஆருக்கும் பொருந்தும் வசனம்தான்.
அவருடைய ஆசீர்வாதத்தில் தோன்றிய இந்த அதிமுக அரசு ‘விஸ்வரூபம்’ படத்தின்போது என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சித்தது. எம்ஜிஆர் இருந்திருந்தால் இது எதுவும் நடந்திருக்காது. அந்த நேரத்தில் ரசிகர்கள் அவர்களுடைய வீட்டின் பத்திரத்தையும் சாவியையும் எனக்காக அனுப்பி வைத்தார்கள். அன்று எனக்கு எம்ஜிஆரின் நினைவு வந்தது.” என்று கமல்ஹாசன் பேசினார்.