கே.டி ராகவன் மனைவி, மகளை பற்றி 1 நிமிடம் நினைத்து பார்த்தார அந்த நபர். ஸ்டிங் ஆப்பரேஷன் என்ற பெயரில் அசிங்கம்.
சக கட்சியில் உள்ள மூத்த தலைவரின் அரசியலுக்கே அஸ்தமனம் எழுத முயற்சித்திருப்பதன் நோக்கம் என்ன.? என கேள்வி எழுப்பும் பலர், இது ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருவகையான சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்றே விமர்சிக்கின்றனர்
.
மருத்துவமனையோ... அரசியல் கட்சியோ... கல்வி நிறுவனங்களோ... எங்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்தாலும் அது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் சிலரை வேண்டுமென்றே குறிவைத்து, வலையில் சிக்க வைத்து, ஆபாசம் என அம்பலப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது. அது ஒரு வகையான வன்முறையும்கூட என்பது அவர்களின் ஆதங்கமா உள்ளது.
இந்த ஒட்டுமொத்த வாதத்திற்கும் மையக்கருவாக அமைந்திருக்கிறது தமிழக பாஜக முக்கிய பொறுப்பாளராக இருந்து அப்பதவிகளை துறந்துள்ள கே.டி ராகவன் மீதாக வீடியோகால் சர்ச்சை. செவ்வாய்க்கிழமை பாஜகவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் என்பவர் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே. டி ராகவன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.ஏனெனில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் குறித்து இதுநாள்வரை இருந்து வந்த பிம்பத்திற்கும். வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் இடையே உள்ள முரண் காத தூர அளவுக்கு இருப்பதே அதற்கு காரணம்.
இந்த குற்றச்சாட்டு தன்மீது வைக்கப்பட்டதை அடுத்து கே.டி ராகவனும் தனது பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக அந்த வீடியோ வெளியிட்ட மதன், கே.டி ராகவன் போன்றவர்களை குறிவைத்து தனது பார்ட்னருடன் இணைந்து ஸ்டிங் ஆபரேஷன் செய்ததாகவும், குறைந்தபட்சம் இதற்கு நான்கைந்து மாதங்கள் ஆனாது என்றும், இதற்காக பெண்களை நியமித்து அவர்களிடம் பேசி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, பிறகு இந்த ஆபரேஷனில் அவர்களை ஈடுபடுத்தியதாகவும் அதன் மூலமே இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுபோல இன்னும் பலருக்கு பொறி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதன் ரவிச்சந்திரன் தன் வாயாலயே கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த வீடியோ வெளியாகி எந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதோ. அதே அளவிற்கு வீடியோ வெளியிட்டவரின் நோக்கம் குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளது. அப்படி என்றால் இந்த வீடியோ திட்டமிட்டு, ஒருவரை குறிவைத்து, அந்த நபரை பலிகடாவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதா.? ஒருவரை ஒரு சூழ்நிலைக்கு உட்படுத்தி, அதற்காக பின்னப்பட்ட சதிவலைதான் இந்த ஸ்டிங் ஆபரேஷனா? என கேள்வி வலுவாக எழுகிறது. வீடியோவை எடுத்தவர் அதை நேரடியாக வெளியிடாமல், அதை வைத்துக்கொண்டு மாநிலத் தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய நோக்கம் என்ன.?
சக கட்சியில் உள்ள மூத்த தலைவரின் அரசியலுக்கே அஸ்தமனம் எழுத முயற்சித்திருப்பதன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பும் பலர், இது ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருவகையான சர்ஜிகல் ஸ்ட்ரைக் இன்றி வேறென்ன என்று விமர்சிக்கின்றனர். வீடியோ வெளியிட்ட நபரின் பின்னணி, அவரின் கடந்தகால நடத்தைகள் போன்றவை, அந்த நபர் யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கத்தில் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியிருக்கலாம் என்றும் பலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல உளவியல் மருத்துவர் ருத்ரன், இந்த விவகாரம் நீதிக்காக நடத்தப்பட்டதாக தெரியவில்லை இது தனிமனிதனை குறிவைத்த நடத்தப்பட்ட அநாகரிகத்தின் உச்சம் என கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பின்வருமாறு:
எதிர்க்கட்சியாயிருந்தாலும், எதிரியாகவே இருந்தாலும் இந்த வீடியோ அந்தரங்கத்தின் அத்துமீறல் தான், இதையும் ஓர் ஆயுதமாய்ப் பயன்படுத்த முற்படுவதும் அநாகரிகம் தான். அதிகாரம் பயன்படுத்தி/ வேறுவிதங்களில் நிர்ப்பந்தப்படுத்தி அல்லது ஏமாற்றி அந்தப் பெண்ணிடம் இதை ஒரு பாலியல் சீண்டலாகப் பயன்படுத்தியிருந்தால் -அதற்கான ஆதாரம் இதுவென்றால், போராடி சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் எடுத்தவன்/பகிர்ந்தவன் பின்னணி பார்க்கும் போது, இது நீதிக்காக நடத்தப்பட்ட, நியாயம் காண வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படமாகத் தெரியவில்லை. லஞ்சம் வாங்குவதைப் படம் எடுத்துப் போடுவதும் இதுவும் ஒன்றாகாது.ராகவன் மீது கோபப்பட வேறு நிறைய இருக்கிறது -இது சமூக மனநிலையின் ஒரு சீரழிவு. என பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் யாராக இருந்தாலும் உள்நோக்கத்துடன், குறிவைத்து, அதற்காக திட்டமிட்டு, ஒருவரை வலையில் சிக்க வைத்து ஆபாசம்... ஆபாசம்... என்று கூக்குரல் எழுப்புவது ஒரு சமூகம் மனநிலையின் சீரழிவின் உச்சம் என்பதுடன், இந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு தலைவரின் அரசியல் பயணத்திற்கு முடிவுரை எழுத வேண்டுமென்ற நோக்கத்தையும் தாண்டி, எதிலும் துளியும் தொடர்பில்லாத அந்த அரசியல் தலைவரின், மனைவி, மகள், குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்து அந்த குறிப்பிட்ட நபர் ஒரு நிமிடம் யோசித்து பார்த்தாரா.? என ஆதங்க குரல் எழுகிறது. இது ஸ்டிங் ஆபரேஷன் அல்ல அசிங்கத்தின் உச்சம் என்றே பலரும் விமர்சிக்கின்றனர்.