Tha.Pandiyan condemned
மத்திய அரசின் பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் நாடு பலவீனம் அடைந்துள்ளதாகவும், ஓராண்டாகியும் எவ்வளவு கறுப்பு பணம் பிடிபட்டது என்று அரசால் கணக்குக்கூட சொல்ல முடியவில்லை என்றும் தா.பாண்டியன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இன்றுடன் ஓராண்டு முடிவடைவதையொட்டி நாடு முழுவதும் எதிர்கட்சிகள் இன்று கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மாவட்ட தலைநகரங்களில், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மதுரையில் இன்று, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அவர், பண மதிப்பிழப்பு குறித்து பிரதமர் மோடி அறிவித்த நவம்பர் 8 இந்தியாவின் வேதனை மிகுந்த நாள் என குற்றம் சாட்டினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவு பெற்ற சுதந்திரத்தை நவம்பர் 8 நள்ளிரவிலேயே இழந்தோம் என்றும், 125 கோடி மக்களுக்கு துன்பத்தை உருவாக்கி இருக்கக் கூடிய நாளாக இந்தநாள் அமைந்து விட்டது என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், ஈரோடு மாவட்டம் பவானியில் இன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் பணமதிப்பு நடவடிக்கையால் நாடு பலவீனம் அடைந்துள்ளதாக அவர் கூறினார். ஓராண்டு ஆகியும் எவ்வளவு கறுப்பு பணம் பிடிபட்டது என்று அரசால் கணக்கு கூட சொல்லமுடியவில்லை என்று குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் செய்லபாடு, நாட்டை எல்லா விதத்திலும் பாழ்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தா.பாண்டியன் காட்டமாக கூறியுள்ளார்.
