சசிகலாவை சந்தித்தாரா செங்கோட்டையன்...? முன்னாள் அமைச்சர் தங்கமணியின் அதிரடி பதில்
அதிமுகவில் சசிகலாவை இணைக்க வாய்ப்பில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சசிகலாவை சந்தித்து பேசியதாக வெளியான தகவலுக்கு தங்கமணி பதில் அளித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும்?
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்துள்ளது. எனவே இரட்டை தலைமையின் ஒருங்கிணைப்பு இல்லாதது தான் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. எனவே அதிமுகவின் தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுகவின் ஒரு பிரிவினர் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேனி மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா அதிமுகவில் தலைமை பொறுப்பு கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுத்தனர். இதன் காரணமாக அதிமுகவில் பெரிய அளவில் சசிகலா இணைப்பு தொடர்பாக குரல் எழும்பும் என பார்க்கப்பட்ட நிலையில் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். இதனையடுத்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை,தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த சசிகலா தொண்டர்களையும் சந்தித்தார். இதனையடுத்து கொங்கு மண்டலத்திலும் சசிகலா சுற்றுப்பயணம் செய்திருந்தார்.
சசிகலாவை சந்தித்தாரா செங்கோட்டையன் ?
இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சசிகலாவை சந்தித்து பேசியதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. இது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது. இருந்த போதும் இது தவறான தகவல் என்றும் அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லையென ஈரோடு மாவட்ட அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நகர் மன்றத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் தான் ஆகியுள்ளது. அதற்குள் 100 சதவிகித அளவிற்கு சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். சொத்து வரி உயர்வால் சாதாரன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தவர், அப்பொழுது வரியை உயர்த்தி திட்டங்களை அதிமுக செயல்படுத்தவில்லையென கூறினார்.
சசிகலாவிற்கு கட்சியில் இடம் இல்லை
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சசிகலாவை சந்தித்ததாக பரவி வரும் தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த தங்கமணி, இது போன்ற யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என கூறினார். மேலும் ரகசியமாக சந்தித்தார்கள், ரகசியமாக போனார்கள் என ஆதாரமில்லாமல் கூறக்கூடாது என கேட்டுக்கொண்டார். இது போன்ற நிகழ்வு தேவையில்லாமல் கட்சிக்குள் சங்கடங்கள் எழக்கூடும் என தெரிவித்தார். எனவே ஆதாரங்கள் இருந்தால் பதில் சொல்ல தயார் என்று தெரிவித்தார். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பான விவகாரங்களில் ஏற்கனவே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட கருத்து தெரிவித்துள்ளார். சசிகலாவிற்கு கட்சியில் இடமில்லை என்று கூறியுள்ளார். எனவே அந்த கருத்தில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லையென உறுதிபட தெரிவித்தார்.