thanga thamizhselvan is very strong in his stand of withdraw the case

தனது தகுதிநீக்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவது உறுதி என தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். தகுதிநீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தகுதிநீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் செல்லாது என நீதிபதி சுந்தரும் முரண்பட்ட தீர்ப்பளித்தனர். 

ஒரே அமர்வில் உள்ள இரு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி ஒருவர் விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளார். அதனால் இந்த வழக்கில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. 

நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பால் அதிருப்தியடைந்த தங்க தமிழ்ச்செல்வன், இந்த வழக்கில் மேலும் தாமதம் ஏற்படுவதால் அதிகமான பாதிப்பு மக்களுக்குத்தான். எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தால் 18 தொகுதிகளில் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனது தொகுதியில் எந்த மக்கள் நலப்பணிகளும் நடைபெறவில்லை. எனவே இந்த வழக்கில் மேலும் காலதாமதம் ஏற்படுவதை விரும்பவில்லை. நான் அந்த வழக்கை வாபஸ் பெற்றால் இடைத்தேர்தலாவது நடக்கும். அப்படியாவது ஒரு எம்.எல்.ஏ தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணிகள் தொடர வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். 

ஆனால், தங்க தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு முரணான கருத்தை வெற்றிவேல் தெரிவித்திருந்தார். தங்க தமிழ்ச்செல்வனின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும் இதுதொடர்பாக அனைத்து எம்.எல்.ஏக்களின் நிலைப்பாட்டை பொறுத்துத்தான் தனது முடிவு அமையும் என தினகரன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஆண்டிப்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்கத்திற்கு எதிராக என் சார்பில் தொடரப்பட்ட வழக்கை கண்டிப்பாக வாபஸ் பெறுவேன். எனது நிலைப்பாட்டை தினகரனிடம் கூறிவிட்டேன். அவரும் ஏற்றுக்கொண்டார். எனவே வழக்கை வாபஸ் பெறுவது உறுதி என தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.