அப்போ அப்பா... இப்போ மகன்... உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.எஸ் மகனுடன் மோதுகிறார் தங்க.தமிழ்செல்வன்..?
மூன்று முறை எம்.எல்.ஏ., ஒரு முறை எம்.பி என இருந்தவரின் நிலையை பார்த்து சோகத்தில் இருக்கிறார்களாம் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள்.
அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவி, அங்கிருந்து திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார் தங்க தமிழ்செல்வன். இவரின் ஆஸ்தான கோட்டை ஆண்டிப்பட்டிதான். ஆனால், ‘பன்னீர்செல்வத்தை நீங்கள்தான் வீழ்த்த வேண்டும்!’ எனச் சொல்லி ஸ்டாலின் போடி தொகுதியைக் கொடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் களம் காண வைத்தார். ஓ.பி,எஸுக்கு எதிராக அதிகமாக டஃப் கொடுத்தாலும் தோல்வியை தழுவினார் தங்க தமிழ்செல்வன்.
தான் ஆளுங்கட்சியிலேயே இருந்தாலும், தேனி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு சொந்த கட்சியினரிடம் தனக்கு செல்வாக்கு வேண்டும் என்று சொல்லி புலம்ப ஆரம்பித்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். அதைக் கேட்டு அவரின் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் சரசரவென அவரின் உச்சந்தலையில் ஏற அதை செயல்படுத்தி பார்த்துவிடுவது என முடிவு செய்துவிட்டாராம் தங்க தமிழ்ச்செல்வன்.
அதனால் பெரியகுளம் நகர்மன்றத் தலைவரானால் ஓ.பி.எஸை எதிர்த்துக் கொண்டே இருக்கலாம். ஓ.பி.எஸை எதிர்த்தால்தான் கட்சித் தலைமையிடம் உனக்கு மரியாதை இருக்கும். தலைமை மதித்தால் லோக்கல் நிர்வாகிகள் உன்பக்கம் தான் எனக் கூறி இருக்கிறார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்த அவர், வர வரவிருக்கும் தேர்தலில் உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ் சொந்த ஊரில் நகர்மன்றத் தலைவராக போட்டியிட வாய்ப்பு கேட்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பாக ஓ.பி.எஸின் இளைய மகனான ஜெயபிரதீப்பை களமிறக்க வேண்டுமென தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை எம்.எல்.ஏ., ஒரு முறை எம்.பி என இருந்தவரின் நிலையை பார்த்து சோகத்தில் இருக்கிறார்களாம் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள்.