"தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்கும்" - தம்பிதுரை நம்பிக்கை!
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதலை உடனே பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமையில் தமிழக அமைச்சர்கள், ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்றுத்தர ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தம்பிதுரை தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரம் குறித்து மத்திய சட்ட அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
தற்போது, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து முறையிட்டதாகவும் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார். மேலும் தமிழகத்துக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த கோரிக்கை வைத்ததாகவும் தம்பிதுரை எம்.பி. கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், வேலுமணி மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்னார் உடனிருந்தனர்.