ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் பணியை இந்திய நிறுவனத்துக்கு ஏன் கொடுக்கவில்லை !! பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த தம்பிதுரை…
மேக் இன் இண்டியா என உரக்க கோஷமிடும் பாஜக அரசு, ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஏன் வழங்கவில்லை என நாடாளுமனற துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை முன்னெடுக்கவும் வலியுறுத்துகிறது. விமான ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடந்த போது பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
விமானங்களின் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது ஏன்? விலை ரூ. 500 கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக உயர்த்தப்பட்டது ஏன்? இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக, தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? என்று காங்கிரஸ் தொடர்கேள்வி எழுப்புகிறது.
இதற்கிடையே ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் தேர்ந்தெருக்கப்பட்டது ஏன்? என்ற தம்பிதுரை மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்..
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறும் மத்திய அரசு ரபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியிருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார். தம்பிதுரை கேள்வி எழுப்பியதும் அவருக்கு பின்னால் இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸலண்ட், எக்ஸலண்ட் என்று கூறி பாராட்டினார்