பிரதமர் மோடி அதை செஞ்சிருந்தா இட ஒதுக்கீடே தேவையில்லையே … நாடாளுமன்றத்தைத் தெறிக்கவிட்ட தம்பிதுரை !!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம் அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர உச்சநீதிமன்றத்தில் தோற்றுப் போகும் என்றும், பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட்டிருந்தால் இட ஒதுக்கீடு என பிரச்சனையே வந்திருக்காது என அதிமுக எம்.பி.யும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை ஆவேசமாக தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும்சட்ட மசோதா மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசிய தம்பிதுரை பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்பது ஏற்க முடியாது என தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற்றமடைய பல திட்டங்கள் இருக்கும்போது இடஒதுக்கீடு ஏன்? படித்திருந்தும் அவமதிக்கப்பட்டதால் தான் அம்பேத்கர் தலித்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரினார். சமூகத்தில் பொருளாதாரத்தை வைத்து இடஒதுக்கீடு வழங்குவது முறையானது அல்ல.பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இதுவரை மத்திய அரசு என்ன செய்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் பலனளிக்கவில்லை என்றால் தான் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.
நாட்டில் சாதியம் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் அனைவருக்குமான நீதி நிலைநாட்டப்படும். தமிழகத்தில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வசிக்கிறார்கள் என ஆவேசமாக பேசினார்.
பிரதமர் அறிவித்தபடி ரூ.15லட்சம் வழங்கினால் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது...? முதலில் பிரதமர் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றட்டும் அதன் பிறகு இட ஒதுக்கீடு என்பதே தேவையில்லை என கடுமையாக பேசினார்.
இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு என்பதை நானும் எனது கட்சியான அதிமுகவும் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தம்பிதுரை மோடி மற்றும் பாஜக அரசுக்கு எதிராக பேசியது அங்கிருந்த உறுப்பினார்களை ஆச்சரியப்படுத்தியது. இவரா இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார் என எம்.பி.க்கள் வியப்படைந்தனர்.