"ரஜினியை சீன எல்லைக்கு அனுப்புங்கள்.. ஒரே அடியில் 20 பேரை வீழ்த்தி விடுவார்" - மோடிக்கு தா.பாண்டியன் ஐடியா!!
நடிகர் ரஜினிகாந்த்தை சீன எல்லைக்கு போர் புரிய அனுப்ப வேண்டும் என்றும், அவர்தான் ஒரே அடியில் 20 பேரை வீழ்த்தி விடுவார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நக்கலாக பேசினார்.
திருநெல்வேலி சிந்து பூந்துறையில் இந்திய கம்ளிஸ்ட் கட்சியின் பிரச்சார பயண பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்
இதனால் விரக்தியடைந்த தா.பாண்டியன் பேசுகையில்,ஒரு நல்ல விஷயத்துக்காக பொதுக் கூட்டம் நடத்தப்பட்டால் அதில் பங்கேற்க யாருமே வருவதில்லை. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வருகிறார் என்றால் மட்டும் கூட்டம் அலைமோதும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது என தெரிவித்தார்.
சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற எல்லை பிரச்னை பகுதிகளுக்கும் காஷ்மீருக்கும் ரஜினி போன்ற நடிகர்களை பிரதமர் மோடி அனுப்பி வைக்கலாம் என யோசனை தெரிவித்தார். அவர்கள் தான் ஒரே அடியில் 20 பேரை வீழ்த்துவார்கள் என நக்கலாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இன்னமும் சினிமா மீதான மோகம் குறையவில்லை என்றும் தா.பாண்டியன் வேதனை தெரிவித்தார்.