பாலக்காடு காவல் கண்காணிப்பாளர் ஆர் விஸ்வநாத், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொலையாளிகள் குறித்து போலீஸாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம் : மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஆர்எஸ்எஸ் தொண்டரை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (எஸ்டிபிஐ) தொண்டர்களால் இந்த கொலை நடந்திருக்கலாம் என பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளியில் திங்கட்கிழமை காலை 27 வயதான ஏ.சஞ்சித் தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரில் வந்த மர்மநபர்கள், முதலில் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளனர், அதில் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததும், காரைவிட்டு இறங்கிய அந்த கும்பல் அவரது மனைவி கண்ணெதிரில் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கீழே விழுந்ததில் அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

பாலக்காடு காவல் கண்காணிப்பாளர் ஆர் விஸ்வநாத், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொலையாளிகள் குறித்து போலீஸாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் எஸ்.டி.பி.ஐ காரர்களுக்கு இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்த கொலை நடந்ததாக அவர் கூறினார். கொலைக்குப் பிறகு அந்த கும்பல் அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பாலக்காடு பாஜக மாவட்டத் தலைவர் கே.எம்.ஹரிதாஸ் கூறுகையில், இது திட்டமிட்ட அரசியல் கொலை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சஞ்சித் மீது ஏற்கனவே கொலை முயற்சி நடந்ததாக அவர் கூறினார். 

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். “கடுமையான கொலைகளை நடத்தி வரும் SDPI குண்டர்கள் மீது காவல்துறை மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால், பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்றும் பாஜக மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தெரிவித்தார். இந்த கொலைக்கு எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசனும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.