சென்னையில் இரவு நேர முழு ஊரடங்கின் போது 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட போவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.  

சென்னையில் இரவு நேர முழு ஊரடங்கின் போது 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட போவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 6ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் இன்று முதல் இரவு ஊரடங்கானது அமலுக்கு வருவதால் சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும் சென்னையில் தேவையின்றி வெளியில் வருபவர்களை கண்காணிக்க 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வணிக நிறுவனங்கள், வியாபாரம் செய்வோர் அனைவரும் பத்து மணிக்கு முன்பாக தங்களது வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை அடைத்து விட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

அத்தியாவசிய பணிகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே போல தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட போவதாகவும், 36 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.