ஊரடங்கு நேரத்திலும் டெண்டர்.பஞ்சாயத்து ராஜ் அதிகாரத்தை முடக்கும் அதிமுக அரசு. அதிகாரிகளை எச்சரிக்கும் ஸ்டாலின்
கிராமப்புறங்களில் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அரசின் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அரசின் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..."கிராமப்புறங்களில் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அ.தி.மு.க. அரசு. அனைவருக்கும் குழாய் மூலம் மார்ச் 2024-க்குள் குடிநீர் வழங்க வேண்டும் என்ற "ஜல் சக்தி மிஷன்" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நேரத்தில் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி 2264.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தலே நடத்த விடாமல் கொள்ளையடித்தது போல், இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தும், ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க நினைப்பது வேதனைக்குரியது.
டெண்டர் கமிஷன் மொத்தமாக ஒரே இடத்தில் வசூல் செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விட வேண்டும் என்று நினைப்பது பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ்., ஜூலை 6-ம் தேதியன்று அவசர அவசரமாக ஒரு காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையை நடத்தி, 15.7.2020-ம் தேதிக்குள் இதற்கான மாவட்ட அளவிலான செயல் திட்டங்களைக் கொடுக்க வேண்டும் 31.7.2020-ம் தேதிக்குள் டெண்டர்களை விட்டு விட வேண்டும். சில பணிகளை 2021 மார்ச் 31-ம் தேதிக்குள் முடித்து பில் தொகையைக் கேட்டுப் பெற வேண்டும். என்றெல்லாம் இவ்வளவு அவசர வசூல் வேட்டை-க்கான வழிகாட்டுதல்களை வழங்குவது ஏன்?மாவட்ட அளவில் டெண்டர் விட்டு- உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குறைத்து- ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்புகளைக் கேலிக்கூத்தாக்கும் செயலில் ஈடுபடுவது அ.தி.மு.க. அரசுக்கு வெட்கக் கேடான செயலாகத் தோன்றவில்லையா?மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு, இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், துறையின் அரசு செயலாளரும் – ஏன், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கூட மனப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்குவது அதிர்ச்சியளிக்கிறது.
ஆகவே நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி ஒதுக்கீடு செய்யத் தவறினால் திராவிட முன்னேற்றக் கழகம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.சட்டத்தின் பிடியில் நாளைக்குச் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரி மற்றும் துறை அரசு செயலாளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.