குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சாமான்களும் எங்கே போகும்...? வேதனையில் வெந்து தணியும் ராமதாஸ்..!
கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா?
தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பீதியில் மக்கள் இருந்து வரும் நிலையில் நாளை டாஸ்மாக் கடை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக நிறுவனம் ராமதாஸ் வேதனையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் 6 வாரங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அரசு கொடுத்த அரிசியை ஆக்கிச் சாப்பிடும் நிலையில், காசு இல்லாமல் காய்கறிகளையே கண்ணால் பார்க்காத நிலையில், அன்புக் குழந்தைகள் ஆசையாய் கேட்டதைக் கூட வாங்கிக் கொடுக்க இயலாத நிலையில், வாரக் கணக்கில் வறுமையின் உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், போதையை மறந்து மக்கள் தெளிந்து வரும் போது தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்தால் ஏழைக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சாமான்களும் எங்கே போகும்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கொரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கேரளம் தடை விதித்திருக்கிறது. கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா? என்று பதிவிட்டுள்ளார்.