காசுக்கு ஆசைப்பட்டு மதுக்கடைகளை திறக்க வாதாடும் அரசு.. ட்வீட் போட்டு எடப்பாடிக்கு ரிவீட் அடித்த கமல்..!
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8-ம் இடத்திலிருந்து 2-ம் இடத்தை எட்டிப் பிடித்துவிட்டது.
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என்று கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,003 இருந்து வருகிறது. இந்த நோயால் 2549 உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மொத்தம் 25,922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 975 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் இதுவரை 9267 பேருக்கும், தமிழகத்தில் 9227 பேருக்கும், டெல்லியில் 7998 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 4173 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசின் செயல்பாடுகளை மீண்டும் கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்:- முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8-ம் இடத்திலிருந்து 2-ம் இடத்தை எட்டிப் பிடித்துவிட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளைத் திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமா தமிழகம் என்று பதிவிட்டுள்ளார்.