சென்னை தலைமைச் செயலகத்தில் அவர்கள் வைப்பது தான் சட்டமாக இருந்தது. சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமிக்காக அரசு சார்ந்த முடிவுகள் மட்டும் அல்லாமல் கட்சி சார்ந்த முடிவுகள் எடுக்கவும் அந்த அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர்.

ஊழல் வழக்குகளில் முன்னாள் அமைச்சர்களை குறி வைத்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மிகுந்த அதிகாரத்தோடு வலம் வந்த ஐந்து அதிகாரிகளை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஊழல் வழக்குகளில் முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் போதே ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரையும் வழக்கில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். கடந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரத்தோடு சில அதிகாரிகள் வலம் வந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அவர்கள் வைப்பது தான் சட்டமாக இருந்தது. சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமிக்காக அரசு சார்ந்த முடிவுகள் மட்டும் அல்லாமல் கட்சி சார்ந்த முடிவுகள் எடுக்கவும் அந்த அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர்.

மேலும் சில அதிகாரிகள் அமைச்சர்களின் பிஆர்ஓக்கள் போல் செயல்பட்டு வந்தனர். மேலும் அரசின் முக்கிய ஒப்பந்தங்கள், திட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் பெற்ற பலன்களை விட அதிகாரிகள் சிலர் அதிக பலன் பெற்று இருப்பதையும் லஞ்ச ஒழிப்புத்துறை மோப்பம் பிடித்துள்ளது. அதில்மிக முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசகர் போல் செயல்பட்டு வந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி பெயர் முதலில் உள்ளது. இதே போல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணிக்கு எல்லாமுமாக இருந்த சென்னை அதிகாரி ஒருவருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை ஸ்கெட்ச் போட்டுள்ளது.

இதே போல் கடந்த ஆட்சியில் உணவுத்துறையில் கோலோட்சிய பெண் அதிகாரி ஒருவரின் சொத்து விவரங்களும் தற்போது தோண்டப்படுவதாக சொல்கிறார்கள். மிக முக்கியமாக கடந்த ஆட்சியில் முக்கிய பதவியில் இருந்து தற்போதும் முக்கிய பதவியில் வலம் வரும் அந்த அதிகாரியின் பின்னணியும் ஆராயப்படுவதாக கூறுகிறார்கள். மேலும் கேபிள் டிவி தொடர்புடைய ஒரு அதிகாரியையும் லஞ்ச ஒழிப்புத்துறை டார்கெட் செய்துள்ளதாக சொல்கிறார்கள். இவர்கள் தவிர காவல்துறை அதிகாரிகள் சிலரையும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்து வருவதாக சொல்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கொங்கு பகுதியில் முக்கிய பதவிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகளைத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பதாக கூறுகிறார்கள். ஊழல் வழக்ககளில் முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் போது அது தொடர்பான வழக்குகளில் அதிகாரிகள் பெயர்களையும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றும் ஒரு சில அதிகாரிகளை வழக்கில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்த தகவல்களை அறிந்து கோட்டை வட்டாரம் அதிர்ந்து போய் கிடப்பது தான் தற்போதைய ஹாட் டாபிக்.