tamilsai against speech about admk mps

காவிரி விவகாரத்தில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வோம் என பயமுறுத்த வேண்டாம் எனவும் தமிழக எம்பிக்கள் முடிந்தால் ராஜினாமா செய்து பாருங்கள் எனவும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 30 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மெத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதனிடையே ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி காவிரி மேற்பார்வை ஆணையம் தேவையில்லை எனவும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

காவிரி மேற்பார்வை ஆணையத்தை அதிமுக அரசு ஏற்க கூடாது எனவும் தமிழக எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இதையடுத்து அதிமுகவில் அதிக எம்.பிக்கள் இருப்பதால் தான் நாடாளுமன்றத்தில் தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கிறது எனவும் அவ்வாறு ராஜினாமா செய்துவிட்டால் அவர்கள் வழக்கம்போல் அவையை நடத்திவிட்டு செல்வார்கள் எனவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வோம் என பயமுறுத்த வேண்டாம் எனவும் தமிழக எம்பிக்கள் முடிந்தால் ராஜினாமா செய்து பாருங்கள் எனவும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.