தமிழர்களின் விருந்தோம்பலை வாழ்நாளில் மறக்கமாட்டேன்..! நெகிழ்ச்சியடைந்த சீன அதிபர்..!
மாமல்லபுரம் பயணம் தனக்கு இனிமையான நினைவுகளை தந்து உள்ளதாகவும் தமிழகத்தின் விருந்தோம்பலை வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். நேற்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபர் மாலை மாமல்லபுரம் வந்தார். அவரை பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வரவேற்று அங்கே இருக்கும் சிற்பங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை இருவரும் பார்வையிட்டனர்.
இரவு விருந்திற்கு பின்னர் சென்னை திரும்பிய சீன அதிபர் இன்று காலை மீண்டும் கோவளம் சென்றிருந்தார். அங்கு இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, இந்தியா வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தமிழகத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்காக நன்றி கூறுவதாக தெரிவித்தார். இந்தியாவின் உண்மையான அன்பை உணர்ந்து கொள்ள முடிந்ததாக கூறினார்.
மாமல்லபுரம் பயணம் அவருக்கு இனிமையான நினைவுகளை தந்ததாகவும் தன் வாழ்நாளில் இதை மறக்க முடியாது என்றும் கூறினார். தன்னைப்போன்றே சீன அதிகாரிகளுக்கும் மாமல்லபுரம் பயணம் மறக்க முடியாதபடி இருக்கும் என்று கருதுவதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தின் விருந்தோம்பல் தன்னை நெகிழ வைத்ததாகவும் தன்னுடன் வந்த அதிகாரிகளும் அதை உணர்ந்ததாகவும் கூறினார். அதற்காக மீண்டும் நன்றி தெரிவிப்பதாக சீன அதிபர் பேசினார்.
தனக்கு நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் இரண்டு நாட்களாக ஆழமாக பேச்சு நடத்தி உள்ளதாக குறிப்பிட்ட சீன அதிபர் இந்த பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாக கூறினார். இறுதியாக, மாமல்லபுரம் வருகை ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் நிச்சயமாக இது ஒரு புதிய தொடக்கம் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.