தமிழகத்துக்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி… மத்திய அரசு பணிக்கு செல்லும் ராஜேஷ் லக்கானி !!
தமிழகத்தில் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் லக்கானி மத்திய அரசு பணிக்கு செல்கிறார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் ராஜேஷ் லக்காணி பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் லக்கானி முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து, தமிழகத்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்க தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குநராக இருக்கும் சத்யபிரதா சாஹூ புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
சத்யபிரதா சாஹு 1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் . இவர் தற்போது சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் தமிழக அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.
விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிகிறது. ராஜேஸ் லக்காணி மத்திய அரசுப்பணிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.