களத்தில் இறங்கி ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு..! என்ன சொல்கிறார் முன்னாள் ஆளுநர் ரோசய்யா..?
டில்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அவற்றின் துணைநிலை ஆளுநர்கள், நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றியதற்கு முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டில்லியில், ஆளுநரின் செயல்களுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
அதேபோல், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு செயல்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டிவருகிறார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களின் மூலமாக மறைமுகமாக ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியை கைக்குள் வைத்துக்கொண்டு மத்திய பாஜக அரசு, மறைமுகமாக தமிழகத்தில் ஆட்சி செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு, ஆளுநர் கோவையில் நேரடியாக களத்தில் இறங்கி சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இவையெல்லாம், ஆளுநரின் அதிகார வரம்பை மீறிய செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், அப்படியான ஒரு குற்றச்சாட்டு ஆளும் தரப்பில் வைக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆய்வு குறித்து கருத்து கூறவிரும்பவில்லை எனவும் ஆனால் இந்த ஆய்வு என்பது ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான விஷயம் என முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.