ரூ.24 லட்சம் மதிப்புள்ள பைக் விபத்தில் சிக்கிய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன்... நேரில் நலம் விசாரித்த முதல்வர்..!
சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை முதல்வர் பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை முதல்வர் பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். இவரது சகோதரரும் நியூஸ் ஜெ. தலைமை பொறுப்பாளரும் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது மகன் அர்ஜுன் (20). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இவருக்கு ரூ.24 லட்சம் மதிப்புடைய ஆடம்பர இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் மேம்பாலம் அருகே வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் அவரது வலது கால் காயம் காரணமாக துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் அர்ஜூனை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.