உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகளை மீட்பு பணிக்கு அரசு அனுப்பிய நிலையில் சிறப்பு குழுவின் தேவை என்ன இருக்கிறது ? என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டிடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மாணவர்களை மீட்பதற்கான தமிழக அரசின் குழுவுக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். தமிழக மாணவர்கள் 193 பேர் மட்டுமே இதுவரை தாயகம் திரும்பியுள்ளனர்.

தமிழக மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தனி கவனம் செலுத்த வேண்டும். ரஷ்யா வழியாக மாணவர்களை அழைத்து வர மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வர தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘ உக்ரைனில் உள்ள அனைத்து மாணவர்களையும் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மீட்புக்குழு உள்ள நிலையில் தமிழகம் ஒரு தூதுக் குழுவை அனுப்ப என்ன தேவை ? பாதுகாப்புத்துறை, வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் மாநில அதிகார எல்லைக்குள் வருகிறதா ? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உக்ரைன் போருடன் நீட் தேர்வை தொடர்புபடுத்தி மாணவர்களின் உயிருடன் விளையாட கூடாது என்று தெரிவித்துள்ளார்.