tamilisai soundarrajan speaks about education sysytem
அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருந்தால் கல்விதுறை சிறப்பாக செயல்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
நீட் எனும் நுழைவுத்தேர்வு, முழுக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருப்பதால் மாநிலப் பாடத்திட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவது கடினம் என புகார் எழுந்தது.
இதனால் நீட் தேர்ச்சி அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் போது, நிறைய கிராமப் புற மாணவர்கள், மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட 85 சதவீத ஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கல்வித்துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக செயல்படும் என்று கூறியுள்ளார்.
சென்னையில், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் இருந்தால், கல்வி துறை சிறப்பாக செயல்படும் என்றார். நேற்றைய தினம் கேஸ் விலை 41 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து யாரும் பேசவில்லை.
மத்திய அரசை குறை சொல்வதே அரசியல்வாதிகளின் வேலையாக இருக்கிறது. கதிராமங்கலத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின் ஆராய்ச்சி செய்வதற்கு மட்டும் அனுமதி கொடுத்தேன் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
மு.க.ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன் ஆகியோர் நீட் தேர்வினை வைத்து அரசியல் செய்வதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
