தமிழகத்தில் ஆட்சி அமைக்காமல் என் உயிர் போகாது - யார் சொல்கிறார் தெரியுமா?
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் காலம் வந்துவிட்டது எனவும் பாஜக ஆட்சி அமைந்த பின்பு தான் என் உயிர்போகும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக அவர்கள் தர்ப்பிலேயே தினகரன் அணி போர்கொடி தூக்கி போராடி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சியான திமுகவும் அதற்கு எதிரான பாஜகவும் தன்னால் முடிந்த அளவு சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். ஆனாலும் மோடியின் ஆதரவால் தான் அதிமுக ஆட்சி நிலைக்கிறது என எதிர்கூட்டணி கட்சிகள் அறைக்கூவல் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் கொங்கு திருமண மண்டபத்தில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தமிழிசை தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் காலம் வந்துவிட்டது எனவும் பாஜக ஆட்சி அமைந்த பின்பு தான் என் உயிர்போகும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஆவியைப் பார்த்து பயப்படுவது போல, காவியைப் பார்த்து பயப்படுகிறார்கள் எனவும் என்னை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் நிறைய விமர்சனங்கள் வருவது கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிட்டார்.
பாஜக என்றால் பொறுமையாக இருப்பார்கள் என சிலர் நினைப்பதாகவும் ஆனால் நாங்களும் திருப்பி அடிக்கின்ற கூட்டம் தான் எனவும் தெரிவித்தார்.