tamilisai condemns rajinikanth political speech

திடீரென்று போருக்கு சென்றால் எந்த அளவு செயல்படமுடியும் என தெரியவில்லை, ரஜினி பாராட்டிய தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லையா? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக புகைப்படம் எடுத்து வருகிறார்.

கடந்த 4 நாட்களாக இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில் பல ஆண்டுகளாக சஸ்பென்சாக வைத்திருந்த அரசியல் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.

ரஜினி காந்தின் அத்தகைய பேச்சு தமிழகத்தில் புது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடைசி நாளான இன்று அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது அரசியலில் குதிப்பதை தீர்மானித்தது போல் பரபரப்பாக பேசினார்.

இந்நிலையில் தமிழக அரசியல் தலைவர்களை பற்றி பேசுகையில்; மு.க.ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர் எனவும்,நல்ல திறமையான நிர்வாகி என சோ சொல்வார், அவரை சுதந்திரமா செயல்பட விட்டால் நன்றாக செயல்படுவார் என தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் நல்ல கருத்துகள் வைத்திருப்பவர், மாடர்னாக சிந்திக்க கூடியவர் என கூறினார்.

திருமாவளவன் தலித்துக்கு அதரவாக குரல் கொடுத்து வருவதாகவும், சீமான் மிகச்சிறந்த போராளி, அவரது கருத்துகளை கேட்டு பிரமிச்சுப் போயிருக்கேன் என தேர்வித்தார்.

இவ்வளவு தலைவர்கள் இருக்கிறார்கள் ஆனால், சிஸ்டம் கெட்டுபோயிருக்கு எனவும், மக்களின் மன ஓட்டம் மாறியுள்ளது எனவும் குறிபிட்டார். அதனால மாற்றத்தை உருவாக்க வேண்டிய நேரமிது, அதை நாம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

போர் வரும் போது நானும் களத்தில் இறங்கி போராடுவேன் என பேசினார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தீடிரென்று போருக்கு சென்றால் எந்த அளவு செயல்படமுடியும் என தெரியவில்லை, ரஜினி பாராட்டிய தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

கடந்த சில மாதங்களாக பாஜக பக்கம் ரஜினி வருவார்... வருவார்... என தமிழக பாஜகவின் தேசிய தலைவர்கள் முதல் கிளை தலைவர்கள் வரை வழிமேல் விழிவைத்து காத்து கொண்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் இந்த பேச்சு பாஜகவுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பக்கம் வராவிட்டாலும் பரவாயில்லை, தமிழக தலைவர்களை பற்றி ரஜினி புகழ்ந்து பேசியது தான் தமிழிசையை இப்படி பேச வைக்க காரணம் என தெரிகிறது.