H.Raja: திருந்தாத திமுகவை புறக்கணிப்போம்.. கொதிக்கும் எச்.ராஜா..!
திமுக திருந்தாது. இந்துக்களின் மத நம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும்.
இந்துக்களின் மதநம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமானது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் நாளிலிருந்து தை முதல் தேதிக்கு மாற்றி அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி
சட்டம் கொண்டு வந்தார். தை முதல் தேதியில்தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழ் சான்றோர்களும் ஆன்றோர்களும் கூறியதை மேற்கோள் காட்டி இந்த முடிவை கருணாநிதி எடுத்தார்.
இதன்படி 2011ம் ஆண்டு வரை தமிழ்ப் புத்தாண்டு தை முதலில் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், கருணாநிதியின் இந்த முடிவை அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். 2011ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கருணாநிதியின் சுய விளம்பரத்துக்காக மக்களின் உணர்வுகளைப் புண்டுபத்திய சட்டத்தை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 21 பொருட்கள் வழங்கும் பரிசு தொகுப்புக்கான கைப்பை சமூக ஊடங்களில் வெளியானது. அதில், பொங்கல் வாழ்த்து மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரிலும் தமிழக அரசின் முத்திரையுடன் அந்த கைப்பை இருந்தது.
இதனையடுத்து, தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் தை முதல் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்தது. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக திமுக அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், சமூக ஊடகங்களில் அதிமுக மற்றும் பாஜகவினர் இதுதொடர்பாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசிய தலைவருமான எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திமுக திருந்தாது. இந்துக்களின் மத நம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும். தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ, முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. திமுகவை புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளார்.