குடகில் கூத்தடிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு குடைச்சல் கொடுக்கும் தமிழக போலீஸ்..!
கர்நாடக மாநிலம் குடகில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தமிழக போலீசார் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். எம்.எல்.ஏக்கள் சென்ற கார் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு பழனிச்சாமி அரசு மீதான ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். எனினும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்படலாம் என்பதால் அதிலிருந்து காத்துக்கொள்வதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குடகில் ஒரு ரெசார்ட்டில் தங்கியுள்ளனர்.
குடகில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை விசாரிக்க ஏற்கனவே தமிழக போலீசார் அங்கு சென்றிருந்த நிலையில், நேற்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்ற காரின் சாவியை பிடுங்கியுள்ளனர்.
குடகு ரெசார்ட்டிலிருந்து கோவிலுக்கு சென்று திரும்பிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்ற காரை வழிமறித்து விசாரணை நடத்திய போலீசார், காரின் சாவியை பிடுங்கி வைத்துள்ளனர். இதனால் சீருடையில் இல்லாத போலீசாருக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சாவியை பிடுங்கியது ஏன் என காரணம் கேட்டதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை என எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிட்டு மீதமிருக்கும் எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று பழனிச்சாமி நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அதற்கு உடன்போக சபாநாயகர் மறுப்பதால், பேரம்பேசியோ அல்லது குடைச்சல் கொடுத்தோ தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்களுடன் இணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால்கூட போலீசார் மூலம் அத்தகைய குடைச்சலை பழனிச்சாமி கொடுத்திருக்கலாம். யாருடைய வியூகம் வெல்லப்போகிறது? எம்.எல்.ஏக்கள் தினகரனுடன் நிற்பார்களா? அணி மாறுவார்களா? ஆட்சி நீடிக்குமா? ஆளுநர் என்ன செய்யப்போகிறார்? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.