கள்ளிச்செடி வளரும் ; பாஜக வளராது - ராஜாவை வெளுத்து வாங்கும் சீமான்...!
தமிழகத்தில் கள்ளிச் செடி கூட வளரும் ஆனால் பாஜக வளரவே வளராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவருக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி மணி என்பவரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் போட்டியிட்டனர்.
இதில், மணி 236 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் எச். ராஜா 51 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.
இந்நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்யின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பாஜக தேசிய செயலாளர் ராஜா, நான் சாரணர் இயக்கத்தின் முன்னாள் மாணவர்; நான் பொறுப்புக்கு வந்தால் தேசப்பற்று, ஒழுக்கத்தை கற்பிப்பேன் என்றார் எனவும், ஆனால் உங்க ஒழுக்கமும் பற்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
51 ஓட்டுகள்தான் வாங்கியிருக்கிறார் ராஜா. அவரை எதிர்த்து நின்ற மணி 236 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். இதுதான் உங்க நிலைமை எனவும் விமர்சித்தார்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது என்கிறார்கள். எங்க வளருது? கள்ளிச்செடி கூட எங்க ஊரில் வளரும். பாஜக வளரவே வளராது என சீமான் கூறினார்.