பிரதமர் மோடியால்தான் தமிழகம் சிறக்கிறது.. அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு ஜூட் விட்ட மாஜி எம்எல்ஏ அதகள விளக்கம்!
இந்தியாவை வல்லரசு நாடாக பிரதமர் மோடி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி மீதுள்ள பற்றின் காரணமாகவும், எந்தத் தவறையும் சுட்டிக்காட்டும் பாஜக மீதுள்ள பற்றின் காரணமாகவும் நான் பாஜகவில் இணைந்துள்ளேன்.
பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். மோடியின் தலைமையை ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தோடு ஏற்றுக்கொள்கிறேன் என்று பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்த்ல் நடைபெற்றது. பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர். குறிப்பாக சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். திடீரென அவர் பாஜகவில் சேர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது. என்றபோதும் அதிமுகவிலிருந்து விலகி மாணிக்கம் பாஜகவில் சேர்ந்திருப்பது சங்கடத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் பாஜகவில் தான் இணைந்தது பற்றி மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவை வல்லரசு நாடாக பிரதமர் மோடி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி மீதுள்ள பற்றின் காரணமாகவும், எந்தத் தவறையும் சுட்டிக்காட்டும் பாஜக மீதுள்ள பற்றின் காரணமாகவும் நான் பாஜகவில் இணைந்துள்ளேன். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு பிரதமர் மோடி காரணமாக இருந்து வருகிறார். அதிமுக ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட மோடியே காரணமாக இருந்தார்.
ஜல்லிக்கட்டு, முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட விவகாரங்களில் எல்லாம் பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். மோடியின் தலைமையை ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்” என்று மாணிக்கம் தெரிவித்துள்ளார்.