திமுகவின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் அபாயகரமாக மாறிவருகிறது என்று பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.  

திருச்சியில் சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது. தமிழகத்துக்கு பல திட்டங்களை அளித்தாலும் திமுக அரசு மத்திய அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு நேர்மறையான எண்ணம் கிடையாது. மத்திய அரசும் பாஜகவும் மாநில அரசுகளுக்கு 100 சதவீதம் ஆதரவு அளித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் அபாயகரமாக மாறிவருகிறது. அண்ணா பிறந்த நாளில், சிறையில் உள்ள குற்றவாளிகள், தீவிரவாதிகள் 700 பேரை விடுதலை செய்யும் அபாயகரமான முடிவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
குடியுரிமைச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கருத்தை திமுக பரப்பி வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. எதிர்க்கட்சிகள் மிகைப்படுத்தி பேசிவருகின்றன. தமிழகத்தில், 7 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை மறைக்க முயற்சி செய்கிறது திமுக அரசு. அவற்றை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக, பாமகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது. தமிழ் மக்களுடன் எப்போதும் இருப்போம். தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிடும். அதற்கான கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்” என்று சி.டி.ரவி தெரிவித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred