கட்சி, குடும்பம், பணம் பதவி போன்ற கட்டாயங்களை கடந்து, சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு இவற்றை இந்த அரசு சாதிக்குமா? சாதிக்குமேயானால் அதை கொண்டாடும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
திமுக என்றாலே தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற முதலமைச்சரே முனைப்புடன் இறங்கினால் அதை விட நம்பிக்கை தரும் விஷயம் என்ன இருக்க முடியும்? என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
எங்கே போகிறது தமிழகம்?
அதிமுக ஆட்சியில் பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தை, 2019, 2021 ஆகிய தேர்தல் பிரசாரத்தில் முதன்மையாக்கியது திமுக. தற்போது அதுபோலவே விருதுநகரில் நடந்துள்ள பாலியல் சம்பவம் திமுக அரசுக்கு தலைவலியாகியுள்ளது. இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “வரிசையாக பாலியல் குற்றச்செய்திகள் புற்றீசல் போல் புறப்பட்டு வருகின்றன. அதில் அதிகம் சிறார்கள் ( juvenile) சம்பந்தப்பட்டு இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. வேலூர் ஆட்டோவில் ஒரு இளம் ஜோடியை கடத்தி சென்று பெண்ணை கற்பழித்த கும்பல்... அதில் ஒருவன் 18 வயத்துக்குட்பட்டவன். விருதுநகரில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டாக கற்பழித்தவர்களில் 4 பள்ளி மாணவர்களும் அடக்கம். அந்த பெண் உதவி கேட்டு அணுகியவரும் கூட அவரை... தமிழ்நாட்டில் எங்கே போகிறோம் எங்கே போகிறோம் என்று கேட்டுகேட்டு நாம் கேட்டு கொண்டே இருக்கையில், தமிழ்நாடு அதும்பாட்டுக்கு நாசமாய் போய்விட்டது . திருத்த முடியாத திருந்த முடியாத அதலபாதாளத்திற்கு வீழ்ந்து விட்டோமா?

பாதுகாப்பு அச்சம்
இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்துள்ள தமிழக காவல்துறைக்கு நன்றி. முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும்போது, கட்சி சார்பு பார்க்காமல் விசாரணை நடத்தப்படும் என்கிறார். விரைவாக தண்டனை கொடுக்கப்படும் என்கிறார். இது உண்மையாக நடந்தால் நன்றி தெரிவித்து பாராட்டும் முதல் ஆளாக நான் நிற்ப்பேன். திமுக என்றாலே தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற முதலமைச்சரே முனைப்புடன் இறங்கினால் அதை விட நம்பிக்கை தரும் விஷயம் என்ன இருக்க முடியும்? கட்சி, குடும்பம், பணம் பதவி போன்ற கட்டாயங்களை கடந்து, சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு இவற்றை இந்த அரசு சாதிக்குமா? சாதிக்குமேயானால் அதை கொண்டாடும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

மைனர்கள் தப்பிக்கக் கூடாது
குற்றம் நிரூபிக்கப்பட்டால்... பட்டால் என்ன, படும். கண்டிப்பாக யாருக்கும் பயப்படாமல் எதற்காகவும் பின் வாங்காமல் நடந்த அநீதியை நிரூபிக்க வேண்டியது காவல் துறையின் கடமை. குறைந்த காலத்திலேயே குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும், அந்த கூட்டுக்களவாணி கயவர் கூட்டம் தண்டிக்கப்பட வேண்டும். முக்கியமாக, வயதை காரணமாக காட்டி அந்த பள்ளி மாணவர்கள் தப்பிக்க கூடாது. முதலில் கற்பழிப்பு குற்றவாளிகளின் பெயர் ஊர் அடையாளம் மறைத்து வைக்கப்பட கூடாது. 2013 “Anti Rape Bill” மூலம் 16 வயது கடந்தவர்களை கூட தண்டிக்கலாம். அப்படியே சட்டப்படி தண்டனை கிடைக்காது என்ற நிலைமை வருமென்றால், கடவுளாக பார்த்து அந்த கயவர்களுக்கு சரியான முடிவை தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். தெலங்கானாவிற்கு தமிழ்நாடு எந்த விதத்தில் குறைந்துவிட்டதாம்? காவல் தெய்வங்கள் தங்கள் கடமையை செய்யட்டும்!” என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
