"தமிழகத்திற்கு பத்து, பன்னிரெண்டு முதலமைச்சர்கள்" - நக்கலடிக்கும் நாஞ்சில் சம்பத்!!
கட்சியின் அமைப்பு செயலாளர் உள்ளிட்ட 60 பதவிகளுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
இந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அமைச்சர்கள் பலவாரியாக விமர்சித்தனர்.
அதன்படி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதுகுறித்து கூறுகையில், கட்சியின் துணைப் பொது செயலாளராக தேர்தல் ஆணையமே அங்கீகரிக்காத டி.டி.வி.தினகரன் புதிய நிர்வாகிகளை நியமிப்பது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும், இந்த நிர்வாகிகள் நியமனம் செல்லாது என்றும் தெரிவித்தார்.
அப்போது அவர் அருகே இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ், தன்னிடம் கேட்காமல் பதவி அறிவித்து தினகரன் அவசரப்பட்டுவிட்டார் என்றும் அவர் கொடுத்த கட்சி பொறுப்பை ஏற்கமாட்டேன் என்றும்தெரிவித்தார்.
இந்நிலையில், அடையாறு வீட்டில் உள்ள டிடிவி தினகரனை சந்தித்து வந்த நாஞ்சில் சம்பத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அமைச்சர் உதயகுமார் மூளைச்சலவை செய்து நிர்பந்தித்ததே ஏ.கே.போஸ் போன்றவர்கள் பதவியை ஏற்க மறுக்க காரணம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் முதலமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாவும், பத்து பன்னிரெண்டு பேர் முதலமைச்சராக இருப்பதாகவும் தெரிவித்தார்.