தமிழக காங்கிரசின் ரூ.20 ஆயிரம் கோடி சொத்து ஸ்வாகா.. ராகுல் காந்தி மீது துக்ளக் குருமூர்த்தி பரபரப்பு புகார்.!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் அறக்கட்டளையை ராகுல் காந்தி தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதனை பல ஆதாரங்களுடன் துக்ளக் ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். குருமூர்த்தியின் இந்த ட்வீட் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் அறக்கட்டளையை ராகுல் காந்தி தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதனை பல ஆதாரங்களுடன் துக்ளக் ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான துக்ளக் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். குருமூர்த்தியின் இந்த ட்வீட் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1950களில் தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துகள் வாங்கப்பட்டன. மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் செயல்பட கட்டிடம் கட்டுவதற்கான நிலம், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உதவிகள் செய்ய வருமானம் தேவை என்கிற அடிப்படையில் சில வணிக ரீதியிலான நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈடுபட்டது. குறிப்பாக 1958ம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டை தொடர்ந்து சென்னையில் மிக முக்கியமான தேனாம்பேட்டையில் ஏராளமான நிலம் வாங்கப்பட்டது.
அந்த இடத்தில் தற்போது காமராஜர் அரங்கம் மற்றும் சில வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காமராஜர் அரங்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. மற்ற இடங்கள் மற்றும் வணிக அமைப்புகளை குத்தகை மற்றும் வாடகை அடிப்படையில் பிறர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு ஆண்டு தோறும் பல கோடிகளில் வருமானம் வருகிறது. மேலும் காமராஜர், சத்தியமூர்த்தி காலகட்டத்தில் வாங்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கான சொத்துகள் தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.
அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சென்னையில் மட்டும் சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், கட்டிடங்கள், வணிக அமைப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சொத்துகளை நேரடியாக நிர்வகிக்க காமராஜர் காலத்திலேயே அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் யாரோ அவர் தான். இது தவிர மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வகையில் சிஆர் கேசவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தற்போடு டிரஸ்டிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.
தேனாம்பேட்டையில் சுமார் 20 முதல் 50 ஏக்கர் அளவிலான இடம் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது. இந்த இடத்தில் தான் தற்போது ஏழு நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மும்பையை சேர்ந்த பில்டர் ஒருவருடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தை ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்க் சிங் என்பவர் மேற்பார்வையில் செயல்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது காமராஜர் காலத்தில் வாங்கிய காங்கிரஸ் சொத்துகளை ராகுல் காந்தி நேரடியாக தனது தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்துகிறார் என்கிற புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து சோனியாவும், ராகுலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்று திருப்பி அனுப்பியதாக பகீர் புகாரை ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நேசனல் ஹெரால்டின் சுமார் 2 ஆயிரம் கோடி சொத்துகளை சோனியா தனது குடும்பத்தின் பெயருக்கு மாற்றியதாக ஒரு வழக்கு உள்ளது. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சுமார் 20ஆயிரம் கோடி சொத்துகளையும் அறக்கட்டளையின் நிர்வாகத்தை நேரடியாக எடுத்து தன்னுடைய குடும்ப நலனுக்காக ராகுல் காந்தி பயன்படுத்துவதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.
இதற்கிடையே காங்கிரஸ் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஜி.கே.வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குருமூர்த்தி வலியுறுத்தியிருந்தார். உடனடியாக குருமூர்த்தியை தொடர்பு கொண்ட வாசன், தான் காங்கிரசில் இருந்து விலகியதுமே அறக்கட்டளை பொறுப்புகளையும் துறந்துவிட்டதகாவும் அதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பதறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தில் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்க் சிங் ஏழு நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட மும்பை கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளாரா? அறக்கட்டளை நிர்வாகிகளை 2009ல் அழைத்து சோனியாவும், ராகுலும் கையெழுத்து பெற்ற ஆவணங்கள் என்ன? என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் 20ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை சோனியா காந்தி குடும்பம் தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்துவது எப்படி சரியாகும்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தன்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆடிட்டர் குருமூர்ததி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.