முதல்வரான பின் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய முதல் கடிதம்..! தமிழகத்தின் தேவைக்கான குரல்
தமிழகத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், முதல்வரான முதல் நாளே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா 2ம் அலையால் மிகக்கடும் பாதிப்பை தமிழகம் சந்தித்துவரும் நெருக்கடியான நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் மிகப்பெரும் சவால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்ற இன்றைய தினமே, மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்துவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், முதல்வரான பின் தனது முதல் கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழகத்திற்கு தேவையானா ஆக்ஸிஜனை கேட்டு எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், வரும் நாட்களில் தமிழகத்திற்கு மத்திய அரசு 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும். தேசிய ஆக்ஸிஜன் திட்டத்தின் கீழ், வெறும் 220 மெட்ரிக் டன் மட்டுமே வழங்கியது துரதிர்ஷ்டவசமானது.
அடுத்த 2 வாரங்களில் தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை 840 மெட்ரிக் டன்களாக உயரும். எனவே அடுத்த 2 வாரங்களில் 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கான ரயில்கள் ஆகியவற்றையும் ஒதுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், இன்று ஒரேநாளில் தமிழகத்தில் மட்டும் 26,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.