சட்டப்பேரவையில் கருணாநிதியின் படத்தை வைத்ததை பாஜக வரவேற்கிறது என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சங்ககிரியில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கும் குணாளன் நாடாருக்கும் பொன்னானுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் புகைப்படங்கள் வைப்பது வழக்கமான விஷயம்தான். கருணாநிதி புகைப்படத்தை வைத்ததை அரசியல் காரணங்களையும் தாண்டி பாஜக வரவேற்கிறது. கலைஞர் தமிழ் பற்றாளர் என்பதால் அதை பாஜக வரவேற்கிறது.
மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தயாநிதிமாறன் அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும். மேகதாது அணையைக் கட்டுவதற்கு கண்டிப்பாக பிரதமர் மோடி சம்மதிக்க மாட்டார். 1956-ஆம் ஆண்டு சட்டப்படி மேகதாதுவில் அணையைக் கட்ட சட்டப்படி சாத்தியமில்லை. மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசியல் தலைவர்களுக்கு வலியுறுத்தும் விதமாக தஞ்சாவூரில் பாஜக சார்பில் அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி படத் திறப்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்நிலையில் சட்டப்பேரவையில் கருணாநிதி படத் திறப்புக்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.