கடைசி நேரத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு... ரொம்ப வருத்தமா இருக்கு... அண்ணாமலை அப்செட்..!
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி தர மறுத்திருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ வேல் யாத்திரைக்கு கடைசி நேரத்தில் தமிழக அரசு அனுமதி தர மறுத்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வேல் யாத்திரைக்கு பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், தமிழக அரசு திடீரென்று தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோதுதான் திமுக உள்ளிட்ட கட்சிகளின் நிகழ்வுகள் நடந்தன.
மதக் கலவரம் செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பாஜகவுக்குக் கிடையாது. பாஜகவின் பாடலில் எம்ஜிஆர் படத்தைப் பயன்படுத்தக் காரணம் அவர் சிவன் மற்றும் முருக பக்தர் என்பதுதான். இதில் வேறெந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும் பாஜக தடையை மீறித்தான் வளர்ந்துகொண்டு வருகிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.