20 ஆண்டுகளுக்கு பின் சாதித்த தமிழக பாஜக.. மார்தட்டும் எல்.முருகன்.
தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021ல் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்று இருந்தோம், இன்று அது நிறைவேறியிருக்கிறது.
மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம், தமிழக மக்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சட்டமன்றத்தில் பாஜகவின் குரல் ஒலிக்கும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம், தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும், பாஜக மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின் வாங்கியதில்லை. பாஜக அரசியல் கட்சி மட்டுமல்ல, மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் சேவை செய்கிற அமைப்பு ஆகும். நான் மாநில தலைவராக பொறுப்பேற்ற போது தெரிவித்த கருத்துக்களை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021ல் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்று இருந்தோம், இன்று அது நிறைவேறியிருக்கிறது.1996 இல் ஒரு சட்டமன்ற உறுப்பினரும், அதன்பிறகு 2001ல் 4 சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். இப்போதைய 2021-ல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. மூத்த தலைவர் திரு எம்.ஆர் காந்தி, பாஜக அகில பாரத மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் திரு. நயினார் நாகேந்திரன், சிறந்த கல்வியாளர் திருமதி. டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இவர்களின் அனுபவம் தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும். தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அகில பாரத தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களுக்கும், மத்திய அமைச்சர்கள் திருமதி நிர்மலா சீதாராமன், திரு ராஜ்நாத்சிங், திருமதி ஸ்மிருதி ராணி உட்பட அனைத்து தலைவர்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் திரு கே. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் மற்றும் அனைத்து தமிழக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, பாமக, தமாகா உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும், தமிழக பாஜகவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.