2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முன்னோட்டமாக 5 மாநில தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை நடத்த பாஜக தீவிரம் காட்டும் என கூறப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்திற்கு தனிதனியாக தேர்தல் நடுத்துவதால் பல கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த செலவை குறைக்க நாடு முழுவதும் ஒரே தேர்தல் தேர்தல் நடத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக அதிக பெரும்பான்மையோடு உள்ளது. அதே நேரத்தில் 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது எனவே அதுவும் பாஜகவிற்கு சாதகமாகவே உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

27 அமாவாசையில் தேர்தல்?

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது 27 அமாவாசையில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதகாவும் இது தொடர்பாக மேலிடத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாக தெரிவித்தனர். தொண்டர்களை உற்சாகப்படுத்த தான் இந்த தகவலை அதிமுக தலைமை வெளியிட்டதாக நினைத்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது நல்ல யோசனையென்றும் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக கூறியது. எனவே ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் நடத்துவது பாஜகவின் கையில் தான் உள்ளது.

தேர்தலை எதிர்கொள்ள தயார்

அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு,சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்தால் கடந்த முறை வென்றதை விட அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். எனவே திமுகவும் தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்தநிலையில் பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 4 மாநிலங்களை கைப்பற்றியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவா, மணிப்பூர் போல் தமிழகத்திலும் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என கூறினார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தெரிவித்தவர், பாஜகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். எனவே 2024 ஆண்டு தேர்தல் வருமா? அல்லது 2026 ஆண்டு தேர்தல் வருமானு தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.