மோடி நடத்துவது சட்டத்தின் ஆட்சியையா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியையா?: திமிறும் தமிழ் உணர்வாளர்கள்.
“ஏழு பேரின் விடுதலை மனுக்களை நிராகரித்துவிட்டோம்! என்று சொல்வதைப் பார்த்தால், பா.ஜ.க. அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படிதான் நாட்டை ஆள்கிறதா? இல்லை ஆர்.எஸ்.எஸ். சட்டப்படி ஆள்கிறதா? பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கூட இந்தப் பிரச்னையில் தீவிரம் காட்டவில்லை. பா.ஜ.க. அரசு இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்றால் என்ன காரணம்?
தமிழர் திருநாள்! என்று நம்மவர்கள் பெருமை மற்றும் கர்வத்தோடு சொல்லும் தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து உளம் மகிழும் இந்த வேளையில், வந்து சேர்ந்திருக்கும் அந்த தகவலானது தமிழ் நெஞ்சங்களை பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் ஏழு பேரின் விடுதலை சாத்தியமற்ற ஒன்று! பொதுவாக அரசியல் கொலைக்கைதிகளை அரசு விடுவித்ததாக வரலாறே இல்லை! எனவே 7 பேரும் சிறைக்கொட்டடியிலேயே கிடக்க வேண்டியதுதான்!....என்பதே. இந்த தகவலைக் கேட்டு தமிழ் இன உணர்வாளர்கள் உள்ளம் நொந்தும், நொறுங்கியும் விட்டனர். சிலரோ நெஞ்சம் கொதித்துப் பேசுகின்றனர். அந்த வகையில், தமிழர் விடுதலைக் கொற்றம் தலைவரான வியனரசு ”சிறையில் வாடும் நளினி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதியரசர்கள் முன்பு வந்தபோது, நளினியின் வழக்கறிஞர் ‘சிறையில் நன்னடத்தை காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2016-ல் தமிழக அமைச்சரவையும், 2018ல் தமிழக சட்டமன்றத்திலும் ஏழு பேரை விடுதலை செய்யலாம் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று வரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இதன் மூலம் சட்டவிரோதமாக அவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது அரசு.’ என்று வாதிட, அதற்கு மத்திய அரசு வழக்கறிஞரான ராஜகோபாலன் ‘நளினி விடுதலை கோரும் மனுவை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதமே நிராகரித்துவிட்டது.’ என்று சொல்லியிருக்கிறார். இது பற்றிய அறிக்கையை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ம் விதிப்படி ஏழு பேர் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம். அப்படி ஒரு முடிவை எடுத்துத்தான் தமிழக சட்டமன்றம் தீர்மானம் போட்டு, ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஆளுநர் இன்று வரை முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறார். நளினி, பேரறிவாளன் போன்றோர் பரோலில் வருகிறார்கள், திரும்பிப் போகிறார்கள், அவ்வளவே. தமிழர் பிரச்னையில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஒரே நிலைப்பாட்டை எடுப்பது யோசிக்க வைக்கிறது.” என்றிருக்கிறார். இது பற்றி பேசும் தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் “ஏழு பேரின் விடுதலை மனுக்களை நிராகரித்துவிட்டோம்! என்று சொல்வதைப் பார்த்தால், பா.ஜ.க. அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படிதான் நாட்டை ஆள்கிறதா? இல்லை ஆர்.எஸ்.எஸ். சட்டப்படி ஆள்கிறதா? பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கூட இந்தப் பிரச்னையில் தீவிரம் காட்டவில்லை. பா.ஜ.க. அரசு இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்றால் என்ன காரணம்?
மோகன் பகத், மோடி அரசு தமிழர்களை எதிரியாக கருதுவதே காரணம். உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழர் விஷயத்தில் மறுக்க, இந்த விஷயத்தில் சட்டச் சிக்கல் இல்லை, இனச்சிக்கலே காரணம்.” என்று வெளுத்திருக்கிறார். ஏழு பேர் விடுதலை கோரிக்கை....முடிவற்ற துயரம்!