ஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..!
பிரதமரை இழிவாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் விநாயகர் கோயில் ஒன்றுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் இடத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. தற்போது 4.77 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. எஞ்சிய 48 ஆயிரம் ஏக்கர் நிலம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உரிய உத்தரவிட்டுள்ளது. நிலங்களை மீட்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு குப்பையில் போட்டுவிட்டது. இந்த விஷயத்தில் நான் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். மக்கள் ஒவ்வோர் ஊரிலும் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த தகவலைச் சொல்ல வேண்டும். தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் உண்டா?
அர்ச்சகர்களை கோயில்களில் எப்படி அவர்களால் நியமிக்க முடியும். இதேபோல் பிரதமரை இழிவாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.