முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மரணம்... அரசியல் கட்சிகளுக்கு சிம்மசொப்பணமாக இருந்தவர்!
வாக்களர் அடையாள அட்டை அறிமுகம், தேர்தலில் புதிய கட்டுப்பாடுகள் என தேர்தலில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் டி.என்.சேஷன். அவருடைய செயல்பாடுகள் அரசியல் கட்சிகளின் வயிற்றில் கிலியை ஏற்படுத்தின. அதன்காரணமாகவே தேர்தல் ஆணையரை 3 பேர் கொண்ட அமைப்பாக மத்திய அரசு மாற்றியது.
தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்.
சென்னையில் உள்ள அடையாறு இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாக டி.என். சேஷனின் உயிர்ப் பிரிந்தது. அவருக்கு வயது 87. கடந்த ஆண்டு அவருடைய மனைவி ஜெயலட்சுமி உயிரிழந்தார். கேரளாவில் உள்ள பாலக்காட்டில் திருநெல்லையில் 1932-ல் பிறந்தவர் டி.என்.சேஷன். இவருடைய முழுப்பெயர் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். அதன் சுருக்கமே டி.என். சேஷன். இயற்பியலில் பட்டம் பெற்ற சேஷன், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் ஐ.ஏ.எஸ் படிப்பை முடித்து தமிழக கேடரில் பல பதவிகளை வகித்துள்ளார்.
உச்சபட்சமாக நாட்டின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக 1990 டிசம்பர் முதல் 1996 டிசம்பர் வரை 6 ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி வகித்தார். வாக்களர் அடையாள அட்டை அறிமுகம், தேர்தலில் புதிய கட்டுப்பாடுகள் என தேர்தலில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் டி.என்.சேஷன். அவருடைய செயல்பாடுகள் அரசியல் கட்சிகளின் வயிற்றில் கிலியை ஏற்படுத்தின. அதன்காரணமாகவே தேர்தல் ஆணையரை 3 பேர் கொண்ட அமைப்பாக மத்திய அரசு மாற்றியது.
தலைமை தேர்தல் ஆணையர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 1997ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் கே.ஆர். நாராயணனை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதேபோல 1999 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.