எங்கள் பொறுமையை ரொம்ப சோதிக்காதீர்கள்.. ஒன்றிய அரசுக்கு எதிராக ஓங்கி அடித்த உச்சநீதிமன்றம்..!
நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வந்தது. இதற்கான கால அவகாசம் வழங்கியும் கூட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி ரமணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வந்தது. இதற்கான கால அவகாசம் வழங்கியும் கூட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகளை ஆராய்ந்து விட்டுப் பேசிய தலைமை நீதிபதி ரமணா, "மத்திய அரசு நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் மதிப்பதில்லை. நீதிமன்றத்திற்கு மரியாதை அளிப்பதில்லை. நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்காதீர்கள்.
தீர்ப்பாய விவகாரத்தில் எத்தனை பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்று கேட்டிருந்தோம். அது குறித்து இதுவரையிலும் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதே போல், சிலர் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறினீர்கள் அவர்களின் விவரங்களும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை என்றார். மேலும், தீர்ப்பாயங்களை நடத்த விருப்பம் இல்லை என்றால் சட்டங்களை ரத்து செய்துவிடுமாறும் தலைமை நீதிபதி காட்டமாக கூறினார்.
பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தீர்ப்பாயங்களின் பணியிடங்களை மத்திய அரசு நிரப்பாமல் இருப்பது ஏன் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். செப்டம்பர் 13ம் தேதி தான் இறுதி கால அவகாசம், இல்லை என்றால் அந்த பணிகளை நாங்களே செய்ய நேரிடும் என எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர்.