துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு விசாரணை ஆணையம் சம்மன்...!
மறைந்த ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.
ஜெயலலிதா உடன் தொடர்புடைய அனைவரிடமும் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வீட்டு பணியாளர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான குருமூர்த்தி வரும் 28 ஆம் தேதி அன்று விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
துக்ளக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சோ அவர்களுடன் உடன், ஜெயலலிதா நெருங்கிய நட்பு பாராட்டிய நிலையில், குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
வரும் 25 ஆம் தேதி அன்று டாக்டர் சிவக்குமார், 26 ஆம் தேதி டாக்டர் நளினி, நர்ஸ் பிரேமா ஆன்டனி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.