5 எம்எல்ஏக்களை கூட்டிட்டு போனா அவ்வளவுதான்...!!! - அரசை மிரட்டும் “டைப்பான ஆளு” கனகராஜ்
நான் விரைவில் அணி மாறிவிடுவேன் என என சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ், நிருபர்களிடம் கூறியதால், அதிமுக தலைமைக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கூறியதாவது:-
சூலூர் தொகுதியில் 2.70 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனக்கு 1.12 லட்சம் வாக்குகள் கிடைத்தது. பொதுமக்களில் பலர் எனக்கு எதிர்ப்பு கொடி காட்டி வருகின்றனர்.
ஜெயலலிதா இறந்த பிறகு நான் தைரியமாக பேசுகிறேன் என கூறுகிறார்கள். நான் உண்மை கூறுகிறேன். இதை வேறு கதையாக மாற்ற கூடாது.
எனது தொகுதி மக்களின் பிரச்சனையை தீர்க்காவிட்டால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடுவேன். வேறு அணிக்கு போய்விடுவேன் என தொடர்ந்து நான் மிரட்டுவதாக கூறுகிறார்கள். நான் யாரையும் மிரட்டவில்லை. அந்தந்த காலகட்டம் வரும் போது எல்லாம் தானாகவே நடக்கும்.
எனக்கு கட்சியின் மேலிடத்தில் இருந்து எந்த நெருக்கடியும் இல்லை. மக்களிடம் தான் நெருக்கடி உள்ளது. நான் மக்களின் பிரதிநிதி. மக்கள் சொல்வதை அரசிடம் எடுத்து சொல்வது எனது வேலை. பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி அரசிடம் கூறுவேன். நிலைமை மோசமாக இருந்தால் அது பற்றி அரசிடம் விளக்கி கூறுவேன்.
மக்களின் பிரச்சனையே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கம் தான். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். இன்னும் 5 எம்.எல்.ஏ.க்கள் போனால் ஆட்சியே போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம் கல் குவாரியில் 2 தொழிலாளர்கள இறந்தனர். அதற்கு காரணமான குவாரியை மூட வேண்டும். இல்லை எனறால் ஓ.பி.எஸ். அணிக்கு மாறுவேன் என கனகராஜ் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து உடனடியாக குவாரி மூடப்பட்டது.
நேற்று முன்தினம் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ கனகராஜ், ராஜினாமா செய்வேன் என்று மீண்டும் மிரட்டல் விடுத்தார். அப்போது, மேலிடத்தில் இருந்து அவரிடம் பேசினர். அவர் அங்கிருந்து சென்ற பின்னர், போலீசார் தடியடி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.